குரு பெயர்ச்சி பலன்கள் 2025 to 2026: கடகம்
குரு பெயர்ச்சி நாள் மற்றும் நேரம்
சித்திரை மாதம் 31 ஆம் தேதி(14.05.2025) புதன்கிழமை இரவு10.36 மணிக்கு சூரிய உதயாதி 42.02 நாழிகை அளவில் திருக்கணிதப்படி குரு பகவான் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு செல்கிறார்.
ஐப்பசி மாதம் 1ம் தேதி(18.10.2025) சனிக்கிழமை இரவு 7.47 மணிக்கு சூரிய உதயாதி 34.20 நாழிகை அளவில் திருக்கணிதப்படி குரு பகவான் அதிசாரமாக மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு செல்கிறார்.
கார்த்திகை மாதம் 19ம் தேதி(05.12.2025) வெள்ளிக்கிழமை மாலை 05.25 மணிக்கு சூரிய உதயாதி 27.40 நாழிகை அளவில் திருக்கணிதப்படி குரு பகவான் வக்ரகதியில் கடக ராசியில் இருந்து மிதுன ராசிக்கு திரும்புகிறார்.
உழைப்பால் முன்னேற்றம் காணும் உத்தமர் நீங்கள். உடன் இருப்பவர்களின் உயர்வுக்காகவும் பாடுபடுவீர்கள். வரும் மே-11 முதல் (வாக்கியப்படி), உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் வந்து அமர்ந்து பலன் தரப்போகிறார் குரு பகவான்.
இது வரையிலும் லாப ஸ்தானமாகிய 11-ம் இடத்தில் இருந்துகொண்டு, பல்வேறு வகைகளிலும் சாதகமான நிலையை உருவாக்கிக்கொடுத்தார் குருபகவான்.
இப்போது அவர், உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் வந்து அமர்கிறார். ஆகவே, எடுத் தோம் கவிழ்த்தோம் என்று பேசக் கூடாது. சொல்லிலும் செயலிலும் நிதானம் அவசியம். வீண் செலவுகளை அறவே தவிர்த்துவிடுங்கள். எவருக்கும் வாக்குறுதி கொடுக்க வேண்டாம்.
குடும்ப ரகசியங்களை வெளியே பகிர வேண்டாம். அதேபோல், அடுத்தவரின் குடும்ப விஷயங்களிலும் தலையிட வேண்டாம். சிற்சில தருணங்களில் சரியான பசி இருக்காது; தூக்கம் கெடும் நிலை உருவாகும். தியானம், யோகப் பயிற்சியில் ஈடுபடுங்கள். மனதை மலர்ச்சியாக வைத்துக்கொள்ளுங்கள்.
உங்களில் சிலர், புண்ணிய ஸ்தலங்களுக்குக் குடும்பத்துடன் சென்று வருவீர்கள். குலதெய்வக் கோயிலின் விழாக்களை, திருப்பணிகளை முன்னின்று நடத்துவீர்கள்.
குரு பார்வை பலன்கள்
குருபகவான் உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தைப் பார்வை இடுகிறார். ஆகவே, தாயாரின் ஆரோக்கியம் சிறக்கும். அவருடனான கருத்து மோதல்கள் விலகும். தாய்வழிச் சொத்துக்கள் கிடைக்க வாய்ப்பு உண்டு.
ஒருசிலர் வண்டி, வாகனங்கள் புதிதாக வாங்குவீர்கள். மனதுக்குப் பிடித்தாமான வீட்டுக்கு மாறுவீர்கள், சிலர், இருக்கும் வீட்டை விரிவுப்படுத்திக் கட்டுவார்கள். கூடா பழக்க வழக்கம் உள்ளவர்களின் நட்பைத் துண்டிப்பீர்கள்.
குரு பகவான் 6-ம் இடத்தைப் பார்ப்பதால்எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். சிலருக்குக் கோர்ட் வழக்குகள் அலைச்சலை உண்டாக்கலாம். பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்ய வழி கிடைக்கும். பெரிய நோய் இருப்பது போன்ற பிரம்மை நீங்கும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும்.
குரு பகவான் 8-ம் இடத்தைப் பார்ப்பதால் பணவரவு உண்டு. ஷேர் மூலம் பணம் வரும். எனினும் சேமிக்க முடியாதபடி செலவுகளும் துரத்தும். ஆரோக்கியம் கூடும். வழக்குகள் சாதகமாகும். முன்கோபத்தைக் குறைத்துக்கொள்ளுங்கள்.
வியாபாரத்தில் தள்ளுபடி, சலுகைகளை அறிவித்துப் பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். வேலையாட்களால் பிரச்னைகள் வரும். கடையை விரிவுபடுத்துவீர்கள். கொடுக்கல்- வாங்கல் விஷயத் தில் கறாராக இருங்கள். சாக்குகள் கொள்முதல் செய்யும்போது, கவனம் தேவை.
சந்தை நிலவரத்தைத் தெரிந்து செயல் படுங்கள்.கூட்டுத்தொழிலில், பங்கு தாரர்கள் சிலர் தங்களின் பங்கைக் கேட்டு தொந்தரவு தருவார்கள். உணவு, டிராவல்ஸ், பப்ளிகேஷன், அழகு சாதனப் பொருள்களால் லாபம் அடைவீர்கள்.
உத்தியோகத்தில் விமர்சனங்கள் வந்து செல்லும். உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் இல்லையே எனும் ஆதங்கம் எழும். எனினும் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு சற்று தாமதமாகக் கிடைக்கும்.
பரிகாரம்:
திருநெல்வேலி, தாமிரபரணி ஆற்றுப் படுகையில் அமைந்துள்ளது குறுக்குத்துரை. குறுக்குத்துறை முருகன் கோயில் ஆற்றில் வெள்ளம் வரும்போதெல்லாம் தண்ணீருக்குள் மூழ்கிவிடும் இந்த முருகனின் கோயில், வெள்ளம் வடிந்ததும் மீண்டும் பொலிவோடு காட்சிதரும். செவ்வாய்க் கிழமை அல்லது கிருத்திகை நட்சத்திரத்தில், இந்தக் கோயிலுக்குச் சென்று சர்க்கரைப் பொங்கல் சமர்ப்பித்து வழிபடுங்கள்; தடைகள் நீங்கி வெற்றிகள் கிடைக்கும்.